தமிழக முதலமைச்சர் விஜய் ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள மக்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:
"உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!
கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!
அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும். வளத்தையும் வழங்கட்டும்!" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மலையாளத்தில் "அனைவருக்கும் உள்ளம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்." என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் மிலாது நபி வாழ்த்து
"இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!
மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்! இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!" என்று தனது வாழ்த்தை சமூக ஊடகத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.