ஆளுநர் ரவி - முதலமைச்சர் ஸ்டாலின்
ஆளுநர் ரவி - முதலமைச்சர் ஸ்டாலின்

கோட்சே கூட்டம்... ஆளுநர் பேச்சை அடுத்து முதல்வர் கடும் சாடல்! இணையத்தில் வறுவல்!!

மருது சகோதரர்கள் பற்றி ஆளுநர் இரவி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருது இருவர் பற்றி தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரைகூட எழுதப்படவில்லை என்று அவர் கூறியதற்கு பல தரப்பினரும் கண்டித்தும் கிண்டலாகவும் சமூக ஊடகங்களில் பதில் கூறிவருகின்றனர்.

தென்னிந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் மருது சகோதரர்களின் பங்கு எனும் தலைப்பில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முத்தமிழ்ச்செல்வி என்பவர் ஆய்வுசெய்துள்ளார் என்பது உட்பட பல தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

முன்னதாக, நேற்று, மருதிருவர் விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்ட செய்தியில், மருதிருவர் வரலாற்றைச் சிறப்பிக்க செய்யப்பட்டவற்றைக் குறிப்பிட்டு அதற்கெதிராகப் பேசுவோரை மறைமுகமாக கடுமையாகச் சாடியுள்ளார்.

அந்தச் செய்தியில்,

”தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக!

*சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ஆம் ஆண்டு!

*தி.மு.க. அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவண்ணத்தில் 'தென்பாண்டிச் சிங்கம்' எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்குவேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர்களது கதை நிலைத்திருக்கிறது.

தி.மு.கழக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப் பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்! இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் 'நடிப்புச் சுதேசிகள்' எனப் பாடினார்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com