சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பூங்கா
சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பூங்கா

கோவை: மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் இறப்பு! – மின்சார வாரியம் தரும் விளக்கம் என்ன?

கோவையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கான காரணம் என மின்சார வாரியம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டம் சவரணம்பட்டி அருகே சின்னவேடம்பட்டியில் துடியலூர் சாலையில் விமானப் படைக்குச் சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு வளாகத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா உள்ளது. பூங்காவில் விளையாடுவதற்காக நேற்று மாலை பிரியா (வயது 8), ஜியான்ஸ் (வயது - 6) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். இருவரும் சறுக்கு விளையாட்டு விளையாட முயன்றனர். அப்போது இருவர் மீதும் மின்சாரம் தாக்கி உள்ளது.

இதனால் இரண்டு சிறுவர்களும் மயங்கி விழுந்ததைக் கண்டு அருகிலிருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த சரவணம்பட்டி காவல்நிலையத்தினர், விசாரணை நடத்திவருகின்றனர். பூங்காவில் உள்ள கம்பியில் ஏற்பட்ட மின்கசிவால் அங்கிருந்த விளையாட்டு உபகரணத்தில் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், சிறுவர் பூங்காவில் இன்று ஆய்வுசெய்த மின்வாரிய அதிகாரிகள், "குடியிருப்பு சார்பாக சிறுவர்கள் பூங்காவை மேம்படுத்தி உள்ளனர். அப்போது, யுஜி கேபிளை தரை வழியில் இணைத்துள்ளனர். இதனால், மின்சாரம் கசிந்து, சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மின் இணைப்பு கொடுத்ததுடன் எங்களது பணி முடிந்துவிட்டது. குடியிருப்பு நிர்வாகம் அமைத்த தெரு விளக்கிற்கு இணைப்பு கொடுத்ததில்தான் பாதுகாப்புக் குறைபாடு உள்ளது. தரைவழி கேபிள் பதித்திருந்த நிலையில், தெரு விளக்கிற்கான ஸ்விட்சைப் போட்டபோது மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்." என்று ஊடகத்தினரிடம் கூறினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com