தமிழகத்தில் செயற்கை நிறமூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்படும் கலர் அப்பளங்கள் தயாரிப்பு, விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது.
பொதுமக்கள், குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில், சில அப்பளங்களின் தயாரிப்பில், அனுமதிக்கப்படாத செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதுபோன்ற செயற்கை நிறமூட்டிகள் கலந்த கலர் அப்பளங்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், அலர்ஜி, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் ஆகியவை ஏற்படலாம் என்று உணவுப் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.
குழந்தைகளை ஈர்க்கும் வகையில், சந்தைகள், சுற்றுலாத் தலங்கள், பொருட்காட்சிகள் ஆகிய இடங்களில் கலர் அப்பளங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் அவற்றைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
உளுந்து, அரிசி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட தரமான அப்பளங்களை எடுத்துக்கொள்ளவும், அவற்றிலும் இயற்கையான நிறத்திற்குப் பதிலாக மிகவும் பிரகாசமாக இருக்கும் அப்பளங்களைத் தவிர்க்குமாறு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.