பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமரே மதவெறியைத் தூண்டுவதா? - வலுக்கும் கண்டனம்!

மதவெறியைத் தூண்டி மக்களைப் பிரித்து தேர்தல் ஆதாயம் தேடும் அற்பத்தனம்... தோல்வி பயம் துரத்துவதால் பிதற்றும் மோடி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

 "நாட்டில் 18வது மக்களவை பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் வடமாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

                முதல் கட்ட தேர்தலே, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாஜகவுக்கு பலத்த அடி கிடைக்கும் என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளது. தோல்வி மிகத் தீவிரமாக பாஜகவைத் துரத்த ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக அடுத்த தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பாஜகவின் ஒற்றைப் பிரச்சாரகரான பிரதமர் நரேந்திர மோடி, பதற்றத்தின் உச்சத்திலும், ஆத்திரத்திலும் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி வருகிறார். 

முற்றிலும் மதவெறியின் உச்சத்தில், இந்து - முஸ்லிம் மக்களிடையே தீவிரமான பிளவை உருவாக்கி நாட்டில் நிரந்தரமாக ரத்த ஆறு ஓடச் செய்திட வேண்டும் என்ற வெறியுடன் அவர் தனது பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார். இதற்கு இந்திய அரசியல் அரங்கில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

                இராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாடா எனும் இடத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, “மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்த நாட்டின் சொத்துக்களில் முதன்மை உரிமை முஸ்லிம்களுக்குத்தான் உள்ளது என்று கூறினார். இதன் பொருள் என்ன? அவர்கள் (காங்கிரஸ்) யாருக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பார்கள்? யார் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களோ, யார் இந்த நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமித்தார்களோ அவர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பார்கள்; நீங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா?” என்று மிகவும் ஆவேசத்துடன் பேசியிருக்கிறார்.

                அதுமட்டுமல்ல, “இந்த நகர்ப்புற நக்சல்கள், நமது தாய்மார்களின், சகோதரிகளின் தாலிக் கொடிகளில் உள்ள தங்கத்தைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள்” என்றும் அவற்றையும் பறித்து முஸ்லிம்களுக்கு தந்துவிடுவார்கள்” என்ற பொருளிலும் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.

                இது எத்தனை அக்கிரமமான, அராஜகமான  பேச்சு!

                ஒரு நாட்டின் பிரதமரே தனது தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக இஸ்லாமிய  மக்கள் மீது வன்மத்தையும் விஷத்தையும் கக்குகிறார். முற்றிலும் உண்மையல்லாத விசயத்தை மக்கள் முன்னால் திரித்துக் கூறுகிறார்.

                இது அப்பட்டமான மூன்றாந்தரப் பேச்சு. முற்றிலும் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.

                அவரது உரை வெளியான உடனே சமூக ஊடகங்களில் திட்டமிட்டு ஆர்எஸ்எஸ் - பாஜக சமூக ஊடக கூலிப் படைகளால் தீவிரமாகப் பரப்பப்படுகிறது. நாடு முழுவதும் இந்து எனும் உணர்வு கொண்டோரிடையே திட்டமிட்டு இஸ்லாமிய வெறுப்பு பரப்பப்படுகிறது. இது தேர்தலில் இந்து மக்களின் வாக்குகளை அணிதிரட்டப் பயன்படும் என்று மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் கணக்கு போடுகிறார்கள்.

                ஆனால், உண்மையில் மன்மோகன் சிங் அப்படிப் பேசினாரா என்பதை உடனடியாக, உண்மை கண்டறியும் ஊடகக் குழுக்கள் ஆய்வு செய்து, மோடியின் உரை முற்றிலும் பொய் என்பதை அம்பலப்படுத்திவிட்டன.

                பிரதமர் மோடி குறிப்பிடுவது, 2006ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் ஆற்றிய உரையே ஆகும். அந்த உரையில் மோடி குறிப்பிடுகிற - உண்மையில் மன்மோகன் சிங் பேசியப் பகுதி இதுதான்:

                “நமது கூட்டு முன்னுரிமைகள் மிகத் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன். விவசாயம், நீர்வளங்கள், கல்வி, கிராமப்புற முதலீடுகள், பொது உள்கட்டமைப்பு முதலீடுகள் ஆகியவற்றுடன்; தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளின் நலன்களே நமது முன்னுரிமை”.

                மேலும் அவர், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் குறித்துப் பேசுகையில், “வளர்ச்சியின் பலன்கள் அவர்களுக்கும் (சிறுபான்மை மக்களுக்கும்) சேரும் வகையில் பொருத்தமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்”  என்று குறிப்பிடுகிறார்.

                அந்த உரையின் தொடர்ச்சியாக, “அவர்கள் நமது வளங்களில் முன்னுரிமை பெறுகின்றனர்” என்று மன்மோகன் சிங் முடிக்கிறார். இங்கு “அவர்கள்” என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டது, மேலே குறிப்பிட்ட அனைத்து தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரையும் சேர்த்துத்தான் என்பது மிகத் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

                ஆனால், நரேந்திர மோடி தனது இராஜஸ்தான் உரையில், மன்மோகன் சிங் அன்றைக்கு பேசியது முஸ்லிம் மக்களுக்காக மட்டுமே என்று திரித்துக் கூறுகிறார்.

                2006ஆம் ஆண்டிலேயே இதே குறிப்பிட்ட பேச்சு தொடர்பாக பாஜகவும் மோடியும் இதேபோன்று அவதூறு கிளப்பினார்கள்; அந்த சமயமே மன்மோகன் சிங் சார்பாக பிரதமர் அலுவலகம் அதற்கான விளக்கத்தையும் தெளிவாக தந்துவிட்டது.

                ஆனால், 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பிரச்சனையை - முற்றிலும் இல்லாத ஒன்றை - மன்மோகன் சிங் அவர்கள் குறிப்பிடாத ஒன்றை - எழுப்பி, நாட்டு மக்களை திசை திருப்பவும் தேர்தல் ஆதாயத்திற்காக மதப்பிளவை உருவாக்கவும் நரேந்திர மோடி பயன்படுத்துகிறார். ‘பிரதமர்’ என்பது நாட்டின் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து, அரவணைத்துச் செல்ல வேண்டிய உயரிய பதவி. ஆனால் அந்தப் பதவிக்கு சற்றும் மரியாதை இல்லாத விதத்தில், மோடி மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

                அவரை தேர்தல் தோல்வி பயம் எந்த அளவிற்கு துரத்துகிறது என்பதை இதன் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

                தென் மாநிலங்களில் பாஜக பலத்த அடி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், வட மாநிலங்களிலும் கடும் சரிவை சந்திக்கும் என்பது தினந்தோறும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் மூலமாக தெரியவருகிறது. குறிப்பாக இராஜஸ்தானில் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரும் அலை உருவாகியுள்ளது.

                இராஜஸ்தான் உள்பட மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் இராஜபுத்திர சமூக மக்கள் உள்பட, இதுவரையிலும் ஆண்டாண்டு காலமாக பாஜகவுக்கும் மோடிக்கும் ஆதரவு அளித்து வந்த மக்கள் சமூகங்கள் தற்போது பாஜகவுக்கு எதிராக திரும்பியிருக்கிறார்கள். மோடி செல்லும் திசையெல்லாம் வாக்காளர்களிடையே பாஜக எதிர்ப்பு அலை - மோடி எதிர்ப்பு அலை பரவலாகியிருப்பதைக் கண்டு குமுறுகிறார்; வெறிப்பிடித்தவராக மாறுகிறார். விளைவாகவே, இந்தியா கூட்டணியின் மீதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீதும் அவர் அவதூறுகளையும் வசைச்சொற்களையும் வாரி இறைக்கிறார்.

                தேர்தல் பிரச்சாரத்தில் மத அரசியல் பேசக்கூடாது. மதவெறுப்பைத் தூண்டக் கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால், இத்தகைய கடுமையான மதவெறி பிரச்சாரத்தை பிரதமர் மோடி கட்டவிழ்த்துவிட்டுள்ள போதிலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது மவுனம் காக்கிறது. அதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கட்சியின் மத்தியக்குழு புகார்க் கடிதமும் அனுப்பியுள்ளது.

                இந்த தோல்வி பயம் மோடியை  மேலும் துரத்துவது உறுதி. இதுபோன்ற மதவெறிப் பேச்சுக்களை புறந்தள்ளி மக்கள் நிச்சயம் எதிர்வினை ஆற்றுவார்கள் என்பது திண்ணம். வடமாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி கணிசமான இடங்களை பெறுவதும் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்வதும் உறுதி." என்று பாலகிருஷ்ணனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட்ட பல அரசியல் தலைவர்களும் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com