தி.மு.க. - சி.பி.ஐ தொகுதி பேச்சுவார்த்தை குழு
தி.மு.க. - சி.பி.ஐ தொகுதி பேச்சுவார்த்தை குழு

திருப்தி அளிக்கும் வகையில் தொகுதி உடன்பாடு! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கும் வகையிலிருந்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிப் பங்கீடு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடத்தியது.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், வீரபாண்டியன், பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் கூறியதாவது:

தமிழகத்துக்குள் பா.ஜ.க. காலூன்ற வாய்ப்பில்லை என்பதை நிரூபிப்பதற்கான தேர்தல் இது.

பொய், புரட்டு என சகல அஸ்திரங்களையும் பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு தீர்வு அளிப்பதற்கு ‘சாரதி’யாக நின்றிருப்பது தி.மு.க.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சர்வ நிச்சயம் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வையும் அதன் அணிகளையும் முற்றாக அகற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவான கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் முடிந்தவுடன் எல்லாம் நல்லபடி நடக்கும்.

எங்களுக்கு திருப்தி ஏற்படும் அளவுக்குத் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே 2 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com