
அரசியல் கட்சிகள் ஏற்பாடுசெய்து நடத்திய கூட்ட நெரிசலில் ஏற்படும் மரணங்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.சுப்பராயன் எம்.பி. கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “இந்த முடிவை அதிகாரத் துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும். மேலும் எதிர்காலத்தில் அரசிற்கு கடும் நெருக்கடிகளை இந்த முடிவு ஏற்படுத்தும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
”இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சார்ந்ததாகும். அவைதான் அதைச் செய்ய வேண்டும்.
அதைச் செய்வதற்கு முழுத் தகுதி படைத்த கட்சிதான் த.வெ.க. அந்தப் பொறுப்பை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அதை, அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது. த.வெ.க. அரசு ஆழமாக சிந்திக்க வேண்டும்.” என்றும் சுப்பராயன் கூறியிருக்கிறார்.