அரசமைப்புச் சட்டத்தை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும்: மு.வீரபாண்டியன்

சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
Published on

அரசமைப்புச் சட்டத்தை ஆளுநர் மதித்துச் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

” தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், தெளிவான தீர்ப்பை வழங்கவில்லை.

எனினும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 உறுப்பினர்களை வழங்கி, அதனை தனிப் பெரும் முதன்மை எண்ணிக்கை கொண்ட கட்சியாக தேர்வு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் தவெக தலைவர் திரு சி.ஜோசப் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியுள்ளார். பதவி ஏற்புக்கு முன்பு தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல.

தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த

எஸ்.ஆர். பொம்மை வழக்கு உட்பட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர், தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளித்து அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் உணர்வை மதித்து நடக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.” என்று வீரபாண்டியன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com