மகளிர் உரிமைத் தொகை திட்டம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம்

மகளிர் உரிமைத்தொகை: இந்தக் குறையை உடனே கவனிங்க முதல்வரே... பாலகி. கடிதம்!

மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏராளமான பயனாளிகளுக்கு முதல் தொகையே எடுக்கப்பட்டுவிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குறையைச் சரிசெய்து தருமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடித விவரம்:

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வங்கி கணக்கில் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேற்று தங்களால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குடும்பத் தலைவிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள், சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை (Minimum Balance) இல்லாவிட்டால் தற்பொழுது தமிழக அரசு அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ள ரூபாய் 1000-த்திலிருந்து குறைந்தபட்சத் தொகை இல்லாததற்கான தண்டத் தொகையும், குறுஞ்செய்தி அனுப்பியதற்கான தொகையையும் வங்கிகள் அவர்களது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கின்றன. இதனால் சம்பந்தபட்ட குடும்பத் தலைவிகள் ஆயிரம் ரூபாயை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை வைக்க முடியாதவர்கள் ஒவ்வொரு மாதமும் இந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இதனால், அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை முழுமையாக அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.

எனவே, தமிழக அரசு வங்கித்துறை அதிகாரிகளுடன் பேசி குறைந்தபட்ச தொகை (Minimum Balance) இல்லை என்கிற காரணத்தினால் எந்தத் தொகையும் பிடித்தம்செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 முழுமையாக சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்கச்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று பாலகிருஷ்ணன் தன் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com