16 பல்கலை. துணைவேந்தர் பதவி காலி- உயர்கல்வி சீர்கெடும் அபாயம்!

Madurai kamaraj university
மதுரை காமராசர் பல்கலை. By LIC Habeeb at ml.wikipedia, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=11728062
Published on

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக் கழகங்களின் நிர்வாகப் பணிகளும், கற்றல் செயல்பாடுகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிற சூழல் கவலையளிக்கிறது; பல பல்கலைக் கழகங்களுக்கு  துணைவேந்தர்கள் இல்லை; 40 சதவிகித ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை; ஆய்வுகளின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆதங்கப்பட்டுள்ளார்.

”ஆளுநர் ஆர்.என்.ரவி காலத்திய அடாவடி நடவடிக்கைகளினால் இப்போது வரை மொத்தமுள்ள 21 பல்கலைக் கழகங்களில் 16 இல் துணைவேந்தர் நியமனங்கள் நடந்தேறாத நிலைமை நீடிக்கிறது. 2026 இறுதி வரை இதே நிலைமை நீடித்தால் 20 பல்கலைக் கழகங்கள் வரை தலைமையற்ற நிலைமைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.” என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார். 

”21 மாநிலப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் நிரந்தரப் பணியிடங்களின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை 8,867 ஆகும். அவற்றில் தற்போது 5,296 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதன் விளைவாக, காலிப்பணியிடங்களின் சதவிகிதம் 40 ஆக உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் 71 துறைகளில் 16 துறைகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே நிரந்தரப் பணியில் உள்ளார்; மேலும் 20 துறைகளில் வெறும் இரண்டு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகின்றனர். 4 ஆய்வு மையங்களில் எந்த பேராசிரியரும் பணிபுரியவில்லை. மொத்தமுள்ள அங்கீகரிக்கப்பட்ட 534 பணியிடங்களில்  பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்டு 180க்கும் குறைவான அதாவது, மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்களே பணியில் உள்ளனர். 

பேராசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் முனைவர் பட்ட மாணவர்களுக்கு போதுமான நேரத்தை, உரிய கவனத்தை அளிக்கமுடியாத நிலை தமிழ்நாட்டின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றது.  இது ஆய்வு வெளியீடுகளின் தரத்திலும் பிரதிபலிக்கிறது. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் நிரந்தர நியமனங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில் கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டே கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கக் கூடியதாகும்.

மாணவர் நலன் முன்னிட்டும், உயர் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு அரசின் உடனடித் தலையீடுகள் தேவைப்படுகிறது.

சட்டரீதியான வழிவகைகளை ஆராய்ந்து, நீதிமன்ற வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து 16 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்து பல்கலைக்கழகங்களின் சுயேட்சையான செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால்  2025 டிசம்பரில் நடத்தப்பட்ட 2,708 உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டுமென்றும், இது தவிர உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டுமென்றும், வரும் காலங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உதவிப் பேராசிரியர் தேர்வு நடத்தி அவ்வப்பொழுது காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்றும்,  உயர்கல்வித் துறையில் ஒன்றிய அரசின் - ஆளுநரின் அத்துமீறிய தலையீடுகளுக்கு அடிபணியக் கூடாது.” என்றும் பெ. சண்முகம் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com