
டெல்லி கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜில் இமாம் இருவருக்கும் ஜாமின் வழங்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி கலவர வழக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜேஎன்யூ மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டிருந்தார். பிணை கோரி உயர்நீதிமன்றத்தை உமர் காலித் அணுகியிருந்த நிலையில் ஜாமீன் மறுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமின் வழங்க தில்லி காவல் துறை தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அப்போது பேசிய நீதிபதிகள், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் உமர் காலித், ஷர்ஜில் இமாம் முற்றிலும் வேறுபடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக காவல்துறை தரப்பில் சமர்ப்பித்த ஆதாரங்களில் நீதிமன்றம் திருப்தி அடைகிறது. ஆகையால் இவர்கள் இருவருக்கும் ஜாமின் வழங்குவது ஏற்புடையது அல்ல.” எனத் தெரிவித்து மனுவை நிராகரித்தனர்.
மேலும், நிபந்தனைகள் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டால் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு ஜாமின் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர்.