சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
பா.ம.க., பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
தே.மு.தி.க. எந்தநிலையையும் எடுக்காமல் விலகி நின்றது. ஆனால், அக்கட்சியின் உறுப்பினர் பிரேமலதா பெண்கள் இட ஒதுக்கீடு வேண்டும் எனத் தீர்மானத்தில் குறிப்பிட்டதை ஆதரித்துப் பேசினார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதில் பேசியதாவது:
“தொகுதி மறுவரையறை தொடர்பான அ.தி.மு.க.வின் நிலைப்பாடு தெளிவானது. தமிழ்நாடு போன்ற மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு விகிதாச்சாரம் குறையக்கூடாது.
தற்போதுள்ள எண்ணிக்கையைக் குறைக்காமல் 50% உயர்த்த வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
வாக்காளர்கள் அதிகமாக உள்ள சட்டமன்றத் தொகுதி, நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வதில் எந்தத் தவறும் இல்லை.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக த.வெ.க., அவசர அவசரமாக சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானத்தை அ.தி.மு.க. எதிர்க்கிறது.
அதே சமயம், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அந்த தீர்மானத்தை மட்டும் அ.தி.மு.க. ஆதரிக்கிறது.” என்று பழனிசாமி கூறினார்.