சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தில், கலை பண்பாடு, தொல்லியல், அருங்காட்சியகங்கள் துறையின் அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் இராஜ்மோகன் வெளியிட்டார்.
அதன் விவரம்:
1) கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 20,000த்தில் இருந்து ரூ. 25,000-ஆக உயர்த்தப்படும்.
2) மாற்றுத் திறனாளிகளுக்கு 50 கலையாசிரியர்கள் மூலம் கலைப்பயிற்சிகள் வழங்கப்படும்.
3) 76 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் புனரமைப்பு செய்யப்படும்.
4) புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சின்னங்களின் பாதுகாப்பு, பராமரிப்பிற்காக 26 நினைவுச் சின்ன பாதுகாவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
5) மதுரையில் தமிழர் நாகரிக அருங்காட்சியகம் அமைக்க ரூ. 2 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
6) நாமக்கல், திருவள்ளூர், கன்னியாக்குமரி, அரியலூர் உட்பட்ட 15 மாவட்டங்களில் அருங்காட்சியகம் அமைக்க ரூ. 80 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
7) தொல்லியல் அகழாய்வுகளில் வெளிக்கொணரப்படும் தொல்பொருட்கள், மாதிரிகளை அறிவியல் பகுப்பாய்வு மேற்கொள்ள ரூ. 2 கோடி செலவில் நவீன தொல்லியல் ஆய்வகம் அமைக்கப்படும்.