தமிழகத்தில் கடந்த 1865ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த 1865 முதல் 2009ஆம் ஆண்டுவரையிலான 10 கோடி நில ஆவணங்களை டிஜிட்டல்மயம் ஆக்கும் பணி, ஏற்கெனவே 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
கொரோனா காலங்களில் இந்தப் பணி நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அது முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், 1975ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரையிலான ஆவணங்கள் டிஜிட்டல்மயம் ஆக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 1865 முதல் 1974 வரையிலான ஆவணங்களை டிஜிட்டல் மயம் ஆக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அசல் ஆவணங்களை நேரடியாக ஸ்கேன் செய்யும் பணிகள் சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் அலுவலக வளாகத்திற்குள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு நாளைக்கு நான்கு லட்சம் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு, குறைந்தபட்சம் 2,000 தரவு உள்ளீட்டுப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தின் பழைய சான்றிதழ்கள் அனைத்தையும் மக்கள் எளிதாக அணுகும் வகையில் 14 மாதங்களுக்குள் டிஜிட்டல்மயமாக்கப்படும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.