இந்த தலைமுறை தவறான அரசியலைக் கற்றுக்கொள்வதாக இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில், அரசியல் குறித்து இயக்குநர் அட்லீ கூறிய கருத்துகள் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அடுத்த தலைமுறை அரசியலில் விஜய்க்கு முக்கிய பங்கு இருப்பதாகவும், தற்போது சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள் குழந்தைகள் அறிந்துகொள்ளும் அளவிற்கு சமூக ஊடகங்கள் மூலம் கிடைத்து வருவதாகவும் கூறினார்.
மேலும், அரசியல் அனைவருக்கும் தொடர்புடையது என்பதால், அரசியல் நமக்கானது அல்ல என்று யாரும் ஒதுங்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"அடுத்த தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள் அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்து தளபதி மு.க.ஸ்டாலினில் முடிந்ததாகக் கருதுகிறேன். இந்தத் தலைமுறை தவறான அரசியலைக் கற்றுக்கொள்கிறது. இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும். முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகும்.
பிள்ளைகள் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காரல் மாக்ஸ். லெனின், மாவோ.. என இவர்களைப் படித்து நல்ல புரட்சிகரமான கருத்துக்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இயக்குநர் அட்லீ சொல்லும் அரசியல் கற்றல் என்பது அடுத்த தலைமுறைக்கு ஆபத்தையே விளைவிக்கும்." என்று போஸ் வெங்கட் கூறியுள்ளார்.