அரசுப் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டத்தின்கீழ் வாரத்திற்கு ஒரு முறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்த பரிசீலனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில பட்ஜெட்டிற்கு முன்னதாக நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில், 80-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மத்திய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியின் தரத்தை மேம்படுத்த வேண்டும், வாரத்திற்கு ஒரு முறை சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதிய உணவுப் பணியாளர்களிடம் ஒப்படைத்து சேவைகளை முறைப்படுத்த வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் அமைச்சரின் முன்பு முன்வைத்தனர்.
இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்தார்.
சமூகநலத் துறை - மகளிர் மேம்பாட்டுத் துறை, இந்த மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருவதால், அவர்களை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் இரண்டையும் 12ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும் என்பது ஆசிரியர் குழுக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தற்போது 1 முதல் 8ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டமும், 10ஆம் வகுப்பு வரை மதிய உணவுத் திட்டமும் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டங்களை, 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் விரிவுபடுத்தினால், 8 லட்சம் கூடுதல் மாணவர்கள் பயனடைவார்கள் என்று ஆசிரியர் குழுக்கள் தெரிவித்தனர்.