தி.மு.க.- 37, அ.தி.மு.க. -1, பா.ஜ.க. -1: வெளியான சர்வே முடிவுகள்!
மாதிரிப் படம்

தி.மு.க.- 37, அ.தி.மு.க. -1, பா.ஜ.க. -1: வெளியான சர்வே முடிவுகள்!

வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. 28 தொகுதிகள் முதல் 37 தொகுதிகள் வரையும், அ.தி.மு.க. ஒரு தொகுதியிலிருந்து 7 தொகுதிகள் வரையும் கைப்பற்றலாம் என்று மக்கள் ஆய்வு நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், மக்கள் ஆய்வு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது பிரச்சாரம் தொடக்க நிலையில் உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணிக்கு 37 தொகுதிகளும், அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு தலா ஒரு தொகுதியும் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதைபோல் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கும் 37 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வாக்கு வேறுபாடு 4 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளதால், இறுதி முடிவுகள் மாறலாம் என்று கூறப்படுகிறது.

அப்படி மாறும்பட்சத்தில், பா.ஜ.க. அணிக்கு 4 தொகுதிகளும் அ.தி.மு.க. அணிக்கு 7 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றிருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பையும் மக்கள் ஆய்வு வெளியிட்டுள்ளது.

அதில், தி.மு.க. ஆட்சி அமைக்க 31. 8 சதவீதம் பேரும், அ.தி.மு.க. ஆட்சி அமைக்க 21. 5 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க 16.2 சதவீதம் பேரும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க 15.2 சதவீதம் பேரும், பா.ஜ.க. ஆட்சி அமைக்க 10.1 சதவீதம் பேரும் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com