திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி! – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Edappadi K. Palaniswami
எடப்பாடி பழனிசாமி
Published on

“அதிமுகவில் உழைப்பவர்கள், விஸ்வாசமாக இருப்பவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகலாம். ஆனால், திமுகவில் அது நடக்காது. திமுக கருணாநிதியின் குடும்ப கட்சி.” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. விழாவின் சிறப்பு மலரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார். அதனை எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா விஜயன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, எடப்பாடி கே.பழனிசாமி பேசியபோது,

“நான் முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடினோம். தற்போது எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானாகி அம்மாளின் நூற்றாண்டு விழாவை நான் பொதுச்செயலாளராக இருக்கிறபோது கொண்டாடுகிறோம். இந்த பாக்கியம் கிடைத்ததுக்கு பெருமைப்படுகிறேன்.

அதிமுக உருவாக்கப்பட்டபோது கலைஞரால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. சோதனையான கால கட்டங்களில் எம்ஜிஆர்-க்கு ஜானகி பக்கபலமாக இருந்தார்.திருமணத்திற்கு பின் எம்ஜிஆர்-க்கு சேவை செய்ய ஜானகி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜானகி.

அதிமுக பிளவுபட்ட போது வழக்கு காரணமாக இரட்டை சிலை சின்னம் முடக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தது. அதிமுகவை வழி நடத்துங்கள் என ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தவர் ஜானகி.

திமுக 10 ஆண்டுகளாக தேர்தலில் தொடர் தோல்விகளை சந்தித்து இன்று ஆட்சியில் இல்லையா?

இருபெரும் தலைவர்கள் மறைந்தும் கூட இன்றைக்கும் நாம் குடும்பம் போல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறோம். அது தான் அதிமுக.

அதிமுக ஒரு குடும்ப கட்சி. அதே போல், திமுக குடும்ப கட்சி என்று சொல்வார்கள். ஆனால், அது கருணாநிதியின் குடும்ப கட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் அந்த கட்சிக்கு தலைவராக முடியும். ஆனால், அதிமுகவில் யார் உழைக்கின்றாரோ, யார் விஸ்வாசமாக இருக்கின்றாரோ யார் வேண்டுமென்றால் இந்த கட்சிக்கு பொதுச் செயலாளர் ஆகலாம். அது போல், ஆட்சியிலும் அதிமுகவில் தொண்டர்கள் கூட சட்டபேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் முதல்வர் ஆகலாம்.இது தான் அதிமுக குடும்ப கட்சி. ஆனால், திமுகவில் அது நடக்காது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் உள்ள வேறுபாடு இது தான்.

தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது.ஆனால், அதிமுக தான் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. சுமார் 31 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கிறது. இந்த 31 ஆண்டுகள் சிறப்பான நல்லாட்சியை தந்தது அதிமுகதான். தமிழ்நாடு பல்வேறு துறைகளில் ஏற்றம் கண்டிருக்கிறது. அதற்கு அதிமுக அரசு தீட்டிய திட்டங்களே காரணம். அதிமுகவின் திட்டத்தால் மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன.

நாம் கோயிலாக வணங்கிய கட்டடத்தையை சில பேர் உள்ளே நுழைந்து சேதப்படுத்திய காட்சியை நாம் பார்த்தோம். அதை எல்லாம் ஆண்டவன் பார்த்து கொள்வான்.

அதிமுகவை முடக்கவோ, அழிக்கவோ நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது. அதிமுக எப்போதெல்லாம் சோதனைகளை சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் வெற்றி பெறுகிறது. இன்று பலர் அதிமுக தோல்வி அடைவதாக பேசுகிறார்கள். திமுக தொடர் தோல்வியை சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

2026 பேரவைத் தேர்தலை நமக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ல வேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் 15 மாத காலம் தான் உள்ளது. குறுகிய காலத்தில் தேர்தலுக்கு தயாராவோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com