அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி

திமுக வெற்றி...தாத்தா - சிறுவன் கதை சொல்லி அசத்திய அமைச்சர் உதயநிதி!

திமுகவின் வெற்றியை ஏன் அனைத்து மக்களும் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இளைஞர் அணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன சிறுவன் – தாத்தா கதை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய தலைமையுரை:

மாநாட்டிற்கு உழைத்த அமைச்சர் நேருக்கு நன்றி. இன்று ராமேஸ்வரத்தில் ஒருவர் இருக்கிறார். 22 கிணறுகளில் நீராடிவிட்டு இராமநாத சாமியை பார்க்க போய்க்கொண்டிருக்கிறார். ஆனால், நாம் மாநில சுயாட்சிக்காக 22 தலைப்புகளில் நம் பேச்சாளர் ஆற்றிய உரை ராமசாமியை நோக்கியதாக உள்ளது. திமுக இளைஞரணியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.

திமுக இளைஞரணி மாநில மாநாடு 100 சதவீத வெற்றி பெற்றுள்ளது. இந்நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.

சேலம் மாநாடு வரும் தேர்தலுக்கான வெற்றி மாநாடு. பல அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி. அதன் செயலாளராக நான்கு ஆண்டுகளுக்கு மேல் பயணித்துள்ளேன்.

உழைப்பின் அடிப்படையில் நிர்வாகிகளை நியமனம் செய்தோம். மாவட்ட வாரியாக சென்று இளைஞரணியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினோம்.

இளைஞரணியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் இருப்பார். பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.

நீட் மிகப் பெரிய உயிர் கொல்லி நோயாக மாறியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 85 லட்சம் பேரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. அதை தலைவரிடம் கொடுக்க உள்ளோம்.

கடந்த அதிமுக ஆட்சியின் துணையுடன் தான் மத்திய அரசு நம் உரிமைகளை பறித்தது.

நம்மிடம் அதிகம் வரியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு குறைந்த தொகையை தருகிறது. நாம் கேட்ட வெள்ள நிவாரண நிதி மத்திய அரசு வழங்கவில்லை.

நான் பேசியதற்கு மட்டும் மத்திய நிதியமைச்சர் பாடம் எடுத்தார். மரியாதை கொடுத்து நாம் கேட்ட நிதியை அவர்கள் தரவில்லை.தமிழை காக்க உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளோம். தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவார்கள்.

நாங்கள் எந்த சோதனைக்கும் பயப்பட மாட்டோம். பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு பயப்படும் இயக்கம் திமுக அல்ல. நாங்க ஈடி-க்கும் பயப்படமாட்டோம் மோடிக்கும் பயப்பட மாட்டோம்.

திமுக, தொண்டர்களை கைவிட்ட வரலாறு கிடையாது. இந்த இயக்கத்தை நாம் பாதுகாத்தால் தான் சமூக நீதியை பாதுகாக்க முடியும்.

இந்திய கூட்டணி கைக்காட்டுபவரே அடுத்த பிரதமர். இந்திய கூட்டணி வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

திமுகவின் தேர்தல் வெற்றியை தமிழக வெற்றியாக மக்கள் கொண்டாடுகின்றனர். திமுகவின் வெற்றியை அதிமுகவினர் அதிசயமாக பார்க்கின்றனர். அதற்கு ஒரு சின்ன கதை சொல்கிறேன்.

ஒரு ஊரில் சிறுவன் இருந்தான். அவனுக்கு ஓட்டப்பந்தயத்தில் ரொம்ப ஆர்வம். அவனோடு யாரும் ஓடி அவனை ஜெயிக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருப்பான். ஒரு தடவை ஊரில் ஓட்டப்பந்தயம் நடந்தது. ஒரு வயதான முதியவர் ஒருவர் அந்தப் போட்டியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். மற்ற எல்லோரையும் விட அந்த சிறுவன் வேகமாக ஓடி வெற்றி பெற்றான். எல்லோரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

மீண்டும் ஒரு போட்டி நடந்தது. அவனைவிட சற்று வயது அதிகமுள்ள குழந்தைகள் கலந்துக் கொண்ட அந்தப் போட்டியிலும் இந்த சிறுவனே வேகமாக ஓடி முதல் பரிசைப் பெற்றான். மக்கள் மீண்டும் அந்த சிறுவனுக்காக கைத்தட்டினார்கள். அந்த முதியவர் மட்டும் அமைதியாக இருந்தார். அந்த முதியவரிடம் சென்று அந்த சிறுவன் கேட்டான், ஏன் நீங்கள் மட்டும் எனக்கு கைத்தட்ட மாட்டேங்குறீங்க என்று கேட்டான்.

அதற்கு அந்த முதியவர், அந்த கிராமத்தில் இருந்த வேறு இரண்டு சிறுவர்களோடு உன்னால் ஓடி ஜெயிக்க முடியுமா என்று கேட்டார். அதில் ஒரு சிறுவன், சத்தான உணவில்லாமல் வாடும் ஏழைவீட்டுப் பையன். மற்றொரு சிறுவன், கண்ணொளி இல்லாத மாற்றுத்திறனாளி. இவர்கள் இரண்டு பேரையும் உன்னால் ஜெயிக்க முடியுமா என்று கேட்டார்.

இப்போது பாருங்கள் என்று சொல்லி வேகமாக ஓடி முதல் ஆளாக வெற்றிக் கோட்டைத் தொட்டான் அந்த சிறுவன். மற்ற இரண்டு சிறுவர்களும் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். இதனைப் பார்த்த மக்கள் கூட்டம், வெற்றிபெற்ற அந்த சிறுவனுக்கு கைத்தட்டவே இல்லை. அந்த சிறுவன் தாத்தாவிடம் போய்க் கேட்டான். ஏன் யாரும் கைத்தட்டவில்லை?

அந்த தாத்தா சொன்னார், இப்போது மீண்டும் ஓடு. ஆனால், இந்த தடவை மற்ற இரண்டு சிறுவர்களுடைய கைகளையும் பிடித்துக் கொண்டு சேர்ந்து ஓடு என்று சொன்னார். அதே மாதிரி, அந்த சிறுவனும் மற்ற இருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சீராக ஓடினான். மூன்று பேரும் ஒன்றாக வெற்றிக் கோட்டைத் தொட்டார்கள். இதைப் பார்த்த, மொத்தக் கூட்டமும் கைத்தட்டி ஆரவாரம் செய்தது.

இப்படிப்பட்ட வெற்றி தான் திமுகவின் வெற்றி! யார் யாரெல்லாம் உரிமைகள் மறுக்கப்பட்டு இருக்கிறார்களோ, அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு நாங்கள் ஓடுகிறோம். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களோடு கைகோர்த்து ஓடுகிறோம். அச்சுறுத்தப்படும் கைகோர்த்து பெரும்பான்மையின் பேரால் சிறுபான்மை மக்களோடு ஓடுகிறோம், கைகோர்த்து மாற்றுத்திறனாளிகளோடு ஓடுகிறோம். மூன்றாம் பாலினம் என்று சொல்லப்படுகிற திருநங்கை, திருநம்பிகளோடு கைகோர்த்து ஓடுகிறோம், காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்ட பெண்களோடு கைகோர்த்து ஓடுகிறோம். எந்தவொரு பாதிக்கப்பட்ட மக்களையும் விட்டுவிடாமல் அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு ஓடுகிறோம்.

எல்லோரும் சேர்ந்து தான் வெற்றிக் கோட்டை தொட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் தான் திமுகவின் தேர்தல் வெற்றியை ஒவ்வொருவரும் தங்களுடைய வெற்றியாகப் பார்த்துக் கொண்டாடுகிறார்கள். அதனால் தான் திமுக வெற்றிபெறும் போதெல்லாம், மக்கள் மத்தியில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது.

முதலமைச்சரின் கனவை நிறைவேற்றி தருவது தான் எங்கள் வேலை. திமுக இளைஞரணி மாநாட்டை நாடே உற்று நோக்குகிறது. இது இளைஞர் அணி அல்ல, கலைஞர் அணி.” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com