‘இதுதான் திமுகவின் Fascist mentality-க்கான Proof...!’

இபிஎஸ்
இபிஎஸ்
Published on

மு.க.ஸ்டாலின் அரசு அனைத்து விதமான “கோரிக்கைக் குரல்களை” ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வினுடைய Fascist mentality-க்கான Proof! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும், டிஎன்பிஎஸ்சி தேர்வில் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து, பேருந்தில் ஏற்றிச் சென்று அலைக்கழித்துள்ளனர். அப்போது மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சி ராணி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பேருந்தில் இருந்தபோது பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பதிவிட்டு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து , வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான சிபிஎம் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் மனைவியுமான பா.ஜான்சிராணி படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று , மு.க.ஸ்டாலின் அரசு அனைத்து விதமான “கோரிக்கைக் குரல்களை” ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வினுடைய Fascist mentality-க்கான Proof!

ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைக்கழித்து , அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்து , தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com