தி.மு.க. பேரணி
தி.மு.க. பேரணி

அண்ணா நினைவுநாள்: தி.மு.க., அ.தி.மு.க.வினர் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரின் நினைவிடம் வரை பேரணியாகச் சென்ற தி.மு.கவினர், அவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணா நினைவுநாளையொட்டி திமுகவினர் அனைவரும் அமைதிப்பேரணி நடத்தி அறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சென்னையில் திமுக அமைதிப்பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப்பேரணியில் திமுக பொருளாளர் டி. ஆர். பாலு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருவல்லிக்கேணி - வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைதிப்பேரணி புறப்பட்டு, அண்ணா நினைவிடத்தில் முடிந்தது.

அண்ணா நினைவுநாளையொட்டி அவரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நினைவிடம் வரை நடைபெற்ற அமைதிப்பேரணிக்குப் பிறகு துரைமுருகன் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அண்ணா நினைவிடத்தில் அடுத்தடுத்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் கே.பி. முனுசாமி, பொன்னையின் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com