போதையில் அடாவடி பேச்சு... தேடி தூக்கிய போலீஸ்… கள்ள ஜோடிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சந்திர மோகன் - தனலட்சுமி
காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சந்திர மோகன் - தனலட்சுமி
Published on

சென்னை மெரினா கடற்கரையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேளச்சேரி சந்திர மோகன் - தனலட்சுமி இருவரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பட்டிப்பாக்கம் லுாப் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில், கார் ஒன்று நின்றது. அதில், ஒரு ஆணும், பெண்ணும் மது போதையில் அதிகமாக சத்தம் போட்டு சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மயிலாப்பூர் போலீசார், அந்த ஜோடியை அங்கிருந்து கிளம்ப சொன்னார்கள். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஜோடி, போலீசாரிடம் ஆபாசமாக பேச தொடங்கியதால் போலீசார் வீடியோ எடுத்தனர். இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜோடி, போலீசாரை மிகவும் கேவலமாக பேசினர். குடிபோதையில் இருந்த அந்த நபர், போலீசாரை பார்த்து, 'பல்லி மூஞ்சிக்காரன்' என்றெல்லாம் உருவ கேலி செய்தார்.

அவருக்கு சற்று அசராமல், அந்த பெண்ணும், ஆணினின் கையை தோளில் போட்டு, செல்பி எடுப்பது போல போஸ் கொடுத்தார்.

'நீங்கள் யார் சார்' என்று போலீசார் கேட்டபோது, 'நான் யாரா...? பார்க்கிறியா… இப்ப உதயநிதியை கூப்பிடவா? விடிவதற்குள் உங்கள் அட்ரஸ் முழுவதையும் எடுத்து, கூண்டோடு மாற்றிவிடுவேன்' என மிரட்டல் விடுத்தார்.

போலீசார் காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வர இருப்பதை அறிந்த அந்த ஜோடி அங்கிருந்து நைசாக தப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியது.

இச்சம்பவம் குறித்து, மயிலாப்பூர் போலீஸ்கார் சிலம்பரசன், அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், அந்த ஜோடி மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இருவரும், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் இருப்பது தெரியவந்தது. பெண் போலீசார் உதவியுடன், இவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அந்த ஆண், சென்னை வேளச்சேரி மருதுபாண்டியன் தெருவை சேர்ந்த சந்திரமோகன் என்பதும், அவர் கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

அவருடன் நள்ளிரவில் அலப்பறையில் ஈடுபட்ட பெண், மயிலாப்பூரை சேர்ந்த தனலட்சுமி என்பதும், திருமணமாகி கல்லுாரியில் படிக்கும் இரு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பின், சந்திரமோகன், தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் உதயநிதியை தனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

அவர்கள் இருவரையும் போலீசார் சைதப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், சந்திரமோகன், தனலட்சுமி இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com