100 யூனிட் இலவச மின்சாரம்: மின்வாரியம் சொல்லும் விளக்கம் என்ன?
இப்போது வழங்கப்பட்டுவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
அதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அக்கழகத்தின் செய்திக் குறிப்பு:
”சமூக வலைத்தளம், காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வீட்டுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சரம் நிறுத்தப்படவில்லை.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்திவரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறித்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது.
இதேபோல், வீட்டுப் பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று அதை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப் பயன்பாட்டிற்கு பாதிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின் கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
எனவே. ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள்/ வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடையத் தேவையில்லை.
வீட்டுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும்.” என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.