தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கொல்லப்பட்ட சிறுவன் மாயமானபோதே காவல்துறை உரிய முறையில் விசாரித்திருந்தால் இந்தத் துயரம் நிகழ்ந்திருக்காது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
”கடந்த 9ஆம் தேதி காணாமல் போன கருப்பசாமி என்ற சிறுவன், 10ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இன்று அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.” என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள அவர்,
”சிறுவன் கழுத்தில் இருந்த நகை மாயமாகி உள்ள நிலையில், புகார் அளித்த அன்றே தீவிரமாக காவல்துறை விசாரித்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்று குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர். திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்பட்டுள்ளது.” எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தான் சட்டம் ஒழுங்கை ஒரு முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமா திரு. M. K. Stalin என்றும் அவர் கேட்டுள்ளார்.
சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தாவிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சரை அவர் வலியுறுத்தியுள்ளார்.