தமிழக இடைக்கால பட்ஜெட் சொத்தையான அத்திப்பழம் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அவர் பேசுகையில், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ரூ.26,000 கோடி அளவுக்கு மாநில அரசின் வரி வருவாய் குறைந்துள்ளது. நிதிநிலையை சீரமைக்க நிபுணர் குழு அமைத்த பிறகே தமிழக அரசு அதிக கடனை வாங்கியுள்ளது. நிதிப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே சென்றால் மக்கள் மீது வரிச்சுமை ஏற்படும்.
வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றும் ஒரு பட்ஜெட்டை தாக்கல செய்துள்ளனர். நிதிநிலை அறிக்கையில் வரவு - செலவு திட்டம் பற்றி உருப்படியாக எதுவும் இல்லை.
பட்ஜெட் சொத்தையான அத்திப்பழம் போல உள்ளது. வெளியே இருந்து பார்த்தால் அழகாக இருக்கும். உள்ளே பார்த்தால் சொத்தையாக இருக்கும் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் இன்று தாக்கல் செய்தனர்.