எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

காலாவதியான பேருந்துகளை இயக்க ஊழியர்களுக்கு நிர்ப்பந்தம் - எடப்பாடி பழனிசாமி

காலாவதியான பேருந்துகளை ஒட்டியே தீரவேண்டும் என்று ஊழியர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

" இந்தியா சுதந்திரம் பெற்றபின்னரும், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும், மக்களின் நன்மைக்காகச் செயல்படும் துறையாக, தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கிவருகின்றன. மற்ற மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து 70 சதவீதம் தனியார் வசமும், 30 சதவீதம் அரசு வசமும் இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளும்வகையில், சுமார் 80 சதவீதம் போக்குவரத்து வசதியை அரசு போக்குவரத்துக் கழகம் தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறது.

அ.தி.மு.க. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய பேருந்துகள் வாங்குவதும், தமிழக மக்கள் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்ள, பேருந்துகளின் ஆயுள் காலத்தை குறைந்த அளவு வருடங்களாக நிர்ணயித்தும், குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய பேருந்துகளை ஏலம்விட்டு, அதற்குப் பதிலாக புதிய பேருந்துகளை வாங்கி, தேவையான ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மெக்கானிக்குகள், மற்ற ஊழியர்களை நியமித்தும், பொதுப் போக்குவரத்தை மக்களின் வசதிக்காக இயக்கியது.

போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தை அரசே ஈடு செய்தது. இவ்வாறு பொதுமக்களுக்கு சேவை செய்து சிறப்பாக செயல்பட்டு வந்த தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது என பல்வேறு செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன.

30 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில், மக்களின் சேவைத் துறையாக, லாப நஷ்ட கணக்கு பாராமல் போக்குவரத்துத் துறை செயல்பட்டது. தேவைப்படும்போதெல்லாம் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டனர்.

தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட இந்த 36 மாத காலத்தில், அவ்வப்போது புதிய பேருந்துகள் வாங்கப்படுவதாகவும் இ-பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் தி.மு.க. அரசின் அமைச்சர் அறிக்கை வெளியிடுகிறாரே தவிர, புதிய பேருந்துகள் வாங்கியதாகத் தெரியவில்லை.

காலாவதியான பேருந்துகளை ஓட்டியே தீரவேண்டும் என்று ஊழியர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது, புதிய பேருந்துகள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதே தவிர, இதுவரை ஒரு பேருந்துகூட வாங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

டயர், உதிரி பாகங்களை முறையாகக் கொள்முதல் செய்யாமல், பேருந்துகள் பழுதுநீக்கப்படாமல், ஓட்டை- உடைசல் பேருந்துகள் இயக்கப்பட்டு, இந்த அரசு மக்களின் உயிரோடு விளையாடி வருகின்றன. பேருந்துகளின் படிக்கட்டுகள் உடைந்து ரோட்டில் விழுகின்றன. பேருந்துகளின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடுகின்றன.

தற்போது, ஆங்காங்கே மழை பெய்யும் நிலையில், பேருந்துக்கு உள்ளேயும் மக்கள் குடை பிடிக்கவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மலைப்பிரதேசங்களிலும் நகரப் பகுதிகளிலும் பிரேக்டவுனாகி நிற்கும் பேருந்துகளை பயணிகள் தள்ளிச்செல்லும் காட்சிகள் சர்வ சாதாரணமாகிவிட்டது.

உடனடியாக பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டுக்காக இயக்கவேண்டும். பழுதடைந்த பேருந்துகளைப் பழுதுபார்த்தும் மக்கள் அச்சமில்லாமல் பயணம்செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com