திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
” தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்னதான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?
இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத சோதனைக் காலம் முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?
“அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா?
குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது வித்தை காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, தீவிரத்தைப் புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும்.” என்று பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.