கமிஷன், கலெக்சன், கரப்ஷன்- ஒரே டயலாக், ஓனர் மட்டும் வேற!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

தமிழகத்தில் 'கமிஷன் - கலெக்க்ஷன் - கரப்ஷன்' இல்லாத துறைகளே இல்லை; இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார்.

வரும் 7ஆம் தேதி தன் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்னர், அவர் இன்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் பயணத்துக்கான இலச்சினையை வெளியிட்டார். அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சியைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்த விவரம்:

”தமிழ் நாட்டு மக்களைத் தேடி வரும் இந்த எழுச்சிப் பயணம், உங்கள் பங்களிப்போடு ஒரு மாற்றத்தை நோக்கிய வெற்றிப் பயணமாக மாறும் என்பதில் எள் முனையாயும் எனக்கு சந்தேகமில்லை.

இதற்கெல்லாம் முன்பாக, சில விஷயங்களையும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விருப்புகிறேன்.

தனிமனித வளர்ச்சியிலும், கூட்டு வளர்ச்சியிலும் வீறுநடைபோட்ட தமிழ் நாடு இப்போது, சில விஷமிகளின் சுயநலத்தால் தள்ளாடுகிறது. மாலுமியை இழந்த கப்பல் போல இலக்கு தெரியாமல் தத்தளிக்கிறது. ஆட்சி நடத்துகிறவருக்கு தமிழ் நாட்டு மக்களின் நலன் பற்றிய கவலை இல்லை.

தன் பெண்டு - தன் பிள்ளை - தன் வளம் போன்றவை மட்டுமே லட்சியமாக இருக்கின்றன. அரசாங்கத்தின் அத்தனை பாகங்களிலும் மக்கள் மீதான அலட்சியம் குடியேறிவிட்டது. மக்கள் நலனுக்கு எதிரான வஊழல் கோரத் தாண்டவமாடுகிறது. எளியவர்கள் உயிரைத் துச்சமாக நினைக்கும் போக்கு ஆட்சியாளர் மனத்தில் நிறைந்துவிட்டது.

தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் இப்போது மகிழ்ச்சியாக இல்லையே.. ஏன்?

ஒருசில கல்விக் கூடங்களும், சில சமூக ஊடகங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கூடாரமாக தொடர்ந்து செயல்படுவது ஏன்?

அமைதிப்பூங்காவான தமிழ் நாடு சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டாலும், போதைப் பொருள் பெருக்கத்தாலும் அல்லலுவது என்?

அதிகாரத்தைக் காட்டி தனிமனிதச் சொத்துக்களை அபகரிப்பதை இந்த அரசு மூடி மறைப்பது எதனால்?

அரசின் அச்சாணியாக இயங்கும் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கப்படவேண்டிய செயல் அல்லவா?

தமிழகத்தில் 'கமிஷன் - கலெக்க்ஷன் - கரப்ஷன்' இல்லாத துறைகளே இல்லை. இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா?

படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?

இப்படி, இந்த ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என்று அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு மாறுகிறது. இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே கண்டுள்ளது. எனவே, திமுக அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா?

சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை எவரும் தமிழ் நாட்டில் பாதுகாப்போடு நடமாட முடியவில்லை. சிறுவர்களைச் சிதைக்கிற பெருங்குற்றங்கள் அதிகரித்துவிட்டன.

முதியோர்கள் உயிரைத் தொடர்ச்சியாகப் பறிக்கிற ஈவு இரக்கமற்ற செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

நாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா அல்லது ஈவு இரக்கமற்ற நீரோ மன்னனின் கொடுங்கோலாட்சியில் இருக்கிறோமா? மக்கள் மனத்தில் நீறுபூத்த நெருப்பாக வேதனை சூழ்ந்து கொண்டிருக்கிறது.” என்று எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் இதே வாசகத்தைச் சொல்லி, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதே வாசகத்தை பழனிசாமியும் கையில் எடுத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com