மெட்ரோ ரயில்களில் விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, ஒலி மாசு அபராதத் தொகை ரூ. 500ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 2500ஆக அதிகரித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். சக பயணிகளைத் தொந்தரவு செய்யும் வகையில் அலைபேசியில் உரத்த குரலில் பேசுவது, செவியில் பொருத்திக்கொள்ளும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தாமல் அதிக சத்தத்தில் வீடியோக்கள் பார்ப்பது அல்லது இசை கேட்பது ஆகியவை குற்றமாகும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு, சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது மெட்ரோ ரயில் இயக்கம் - பராமரிப்பு சட்டம் 2002, பிரிவு 59-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், விதிகளை மீறுபவர்கள் அந்த மெட்ரோ வளாகத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் வெளியேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளதால் விதிகளை முறையாகப் பின்பற்றும்படி பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.