கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை
கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை

கெளதமி அளித்த புகார்: பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் போலீசார் சோதனை!

நடிகை கெளதமி அளித்த புகாரின் பேரில் காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்களுடன் நாயகியாக நடித்தவர் கெளதமி. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

அதில், ”எனது மகளின் பராமரிப்பு செலவு, எனது மருத்துவ சிகிச்சைக்காக எனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் கட்டுமான அதிபர் அழகப்பன் என்பவர் அந்த நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாக கூறினார். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை அழகப்பனுக்கு வழங்கினேன். இந்த நிலையில் போலி ஆவணங்களைத் தயாரித்து அழகப்பனும், அவரது மனைவி, குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்.

இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தந்து, அபகரித்த அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கெளதமி கூறியிருந்தார்.

மேலும், பா.ஜ.க. கட்சியில் புகார் அளித்தும் மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறி நடிகை கெளதமி பா.ஜ.க. இருந்து வெளியேறினார்.

இதற்கிடையே, அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர். மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலத்தின் ஆவணங்களை காரைக்குடி வருவாய்த் துறை அதிகாரிகளின் உதவியுடன், குற்றப்பிரிவு போலீசார் சரிபார்த்தனர். மேலும், அழகப்பனிடமும் விசாரணை மேற்கொண்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com