குஷ்பு
குஷ்பு

குஷ்புவின் பேச்சுக்கு கீதா ஜீவன், அம்பிகா கண்டனம்… தொடரும் 3-வது நாள் போராட்டம்!

மகளிர் உரிமைத் திட்டம் குறித்து குஷ்புவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன், நடிகை அம்பிகா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பா.ஜ.க. தேசிய மகளிரணி ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு பேசிய கருத்துக்கு தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை அம்பிகா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

அம்பிகா
அம்பிகா

"யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ, அதனை ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள். அவ்வாறு பாராட்ட முடியாவிட்டால் அமைதியாக இருங்கள். 'பிச்சை' என்று ஏன் சொல்ல வேண்டும்? 5 ரூபாய் கூட உதவியாகத்தான் இருக்கும்." இவ்வாறு அம்பிகா பதிவிட்டுள்ளார்.

அதைப்போல், குஷ்புவின் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகையை, அரசு பிச்சை போடுவதாக இழிவுபடுத்தி பேசியுள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் குஷ்பு இப்படி இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் குஷ்பு என்பதை இதன் மூலம் நாம் அறிய முடிகிறது.

நடிகை குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஏதாவது தெரியுமா?. அந்த 1000 ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?. ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பார்த்து பேசுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலனாக உள்ளது.

இதனை சிலர், 'முதல்வர் ஸ்டாலின் எனக்கு தரும் சீர்' என சொல்கிறார்கள். சில தாய்மார்கள், 'என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்ளாவிட்டாலும் மகராசன் முதல்வர் ஸ்டாலின் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்து கொள்கிறார்' என சொல்லியிருக்கிறார்..

அமைச்சர் கீதா ஜீவன்
அமைச்சர் கீதா ஜீவன்

நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீங்க. நிச்சயமாக இதற்காக உங்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள்" என்று கீதா ஜீவன் கடுமையாக பேசியுள்ளார்.

அதேபோல், திமுக மகளிர் அணியினர் இன்று பல்வேறு இடங்களில் குஷ்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com