ஜிகே மணி பதவி பறிப்பு... அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு!

பாமக வழக்கறிஞர் பாலு
பாமக வழக்கறிஞர் பாலு
Published on

"பாமக சட்டப்பேரவைத் தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்டும்" என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு வழங்கிய பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் வழக்கறிஞர் பாலு.

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்ற பாமக தலைவராக ஜி.கே.மணியும், கொறாடாவாக அருளும் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது பாமகவில் பிளவு ஏற்பட்டு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

பாமகவில் உள்ள 5 எம்எல்ஏக்களில் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் ராமதாஸ் அணியில் உள்ளனர். மற்ற 3 பேரும் அன்புமணி அணியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், அடுத்த மாதம் தமிழக சட்டப்பேரவை கூட இருக்கிறது. எனவே, அன்புமணி தரப்பினர் வழக்கறிஞர் கே.பாலு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், சட்டமன்ற தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியையும், கொறடா பொறுப்பில் இருந்து அருளையும் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்பின்னர், வெளியே வந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் கே.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“பாமக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அருள் எம்எல்ஏ அந்த கட்சியை சேர்ந்தவர் போல பேசி வருவது நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அருளை சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பாமகவின் தலைவரின் பதவி காலத்தை நீட்டித்து அதற்கான தீர்மானத்தை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்து கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அதற்கான ஒப்புதல் அளித்துள்ளனர். அதில், பாமக அலுவலகம் திலக் தெருவில் இருப்பதையும், பாமகவின் தலைவர் அன்புமணி என்பதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் கட்சியின் சின்னம் வேட்பாளர் ஆகிய ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே உள்ளது என்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னமும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் அன்புமணியே தலைவராக ஏற்று செயல்பட்டு வருகின்றனர்.

பாமகவின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த ஜி. கே. மணியின் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவியில் வெங்கடேஸ்வரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பாமக சட்டமன்ற கொறடாவாக விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதத்தை சட்டமன்ற செயலகத்திடம் அளித்தும் அதற்கான பதில் தற்போது வரை கிடைக்கவில்லை.

அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பாமகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மபுரி வெங்கடேசனுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுவிடம் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பரிசீலனை செய்து உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சி கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு எங்களையே அழைக்க வேண்டும். பாமக எம்.எல்.ஏ.க்கள் 5 பேரில் 3 பேரின் ஆதரவு அன்புமணிக்கே உள்ளது. கர்நாடகா, டெல்லி, ஆந்திர மாநில தேர்தல்களில் பாமக போட்டியிட்டுள்ளது. எதிர்வரும் பீகார் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.” இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com