ஆசிரியர் உமா மகேஸ்வரி
ஆசிரியர் உமா மகேஸ்வரி

அரசுக்கு எதிராகப் பதிவு: இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் ஆசிரியர்!

அரசுக்கு எதிராக சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டு வந்த ஆசிரியர் உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் கணிதப் பாடப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி. கல்விச் செயற்பாட்டாளரான இவர், தனது முகநூல் பக்கத்தில், கல்வித்துறையில் உள்ள குறைகளையும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது குறித்தும் அவ்வப்போது எழுதிவருபவர்.

இந்த நிலையில், இவரின் முகநூல், வாட்சாப் ஆகியவற்றில் அரசுக்கு எதிராகவும் பொது அமைதியைக் குலைத்தும் ஆசிரியர்களின் உணர்வுகளைத் தூண்டும்வகையிலும் பல முறை கருத்துக்கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிமுறைகள் பிரிவு 12-க்கு எதிராக நடந்துகொண்டுள்ளார் எனக் கூறி அவரை இடைநீக்கம் செய்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேற்றுமுன்தினம் தேதியிட்டு உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வழக்கம்போல, ஆசிரியர் உமா பள்ளிக்குச் சென்றபோது அவரிடம் இடைநீக்க உத்தரவு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர் உமா மகேஸ்வரி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இடைநீக்க உத்தரவை பள்ளிக்கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com