அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் பேருக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
"தமிழகத்தில் உள்ள 5,000 அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக ஏஐ கோடிங் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
நம் வீட்டுக் குழந்தைகள் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளின் பயனாளர்களாக மட்டும் இல்லாமல், அதை உருவாக்குபவர்களாகவும் வளரவேண்டும். இந்தக் கற்பித்தலுக்கென புது ஆசிரியர்களை நியமிக்காமல், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே 'டிரைனிங் தி டிரெய்னர்ஸ்' முறையில் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும்.
மாணவர்களின் மனநிலையைப் பேணிக் காப்பது அவசியம் என்பதால், மெல்லக் கற்கும் மாணவர்களை ஒதுக்காமல் அவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
பள்ளிகளின் உட்கட்டமைப்பைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். பிரிவினையையோ வேற்றுமையையோ தூண்டும் வகையில் பள்ளி வளாகத்திற்குள் எந்தச் செயல்பாடும் இருக்கக்கூடாது.
பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களைத் தூதுவர்களாக அவர்கள் படித்த பள்ளிகளுக்கு அழைத்து வந்து, அவர்களின் கடந்த காலத்தைப் பற்றியும், சாதனைகளைப் பற்றியும் சொல்லவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் உத்வேகம் பெறுவார்கள்.
உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்திசெய்யும் பள்ளிகளுக்கு மட்டும்தான் மேற்கொண்டு தரம் உயர்த்துவதற்கும், புதுபித்தலுக்கும் அனுமதி வழங்கப்படும்." என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.