சென்னையில் நேற்று ஒரே நாளில் அம்மா உணவகம் மூலம் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது. 16.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி சென்னையில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்தது. சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் நேற்றும் இன்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, சென்னையில் அம்மா உணவகங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
நேற்று காலை மற்றும் பிற்பகலில் 78,557 பேருக்கும், இரவு 29,316 பேருக்கும் உணவு வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது .
மேலும், நேற்று ஒரு நாளில் மட்டும் 16.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இது வழக்கத்தை விட 2 லட்சம் லிட்டர் அதிகம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.