அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை முதலான விவரங்கள் அனைத்தையும் வழங்கும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பு விவரம் :
” தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள், 52 தொழில்நுட்பக் கல்லூரிகள்/ சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டுவருகின்றன.
இக்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய, அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்ற காரணங்களுக்காகவும் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர், பெற்றோர், பொதுமக்கள் வருகின்றனர். அந்நிறுவனங்களில் வழங்கப்படும் ஆகியோருக்கு பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம், தனியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது, அலுவலக நடைமுறைகள், தனியர்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இதற்கு ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் (Help Desk) கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும். இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும்வகையில் அமைக்கப்படும்." என்று அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.