கரூர் துயரம் நடந்தது எப்படி…? – வீடியோ ஆதாரம் வெளியிட்டு தமிழக அரசு விளக்கம்!

கரூர் துயரம் நடந்தது எப்படி…? – வீடியோ ஆதாரம் வெளியிட்டு தமிழக அரசு விளக்கம்!
Published on

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது நடந்த சம்பவங்களின் வீடியோக்களைத் தொகுத்து, அவற்றை ஆதாரமாகக் கொண்டு தவெக அளித்த புகார்களை அரசு மறுத்துள்ளது.

கரூரில் நடைபெற்ற விஜய் பிராசார கூட்டத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், முறையாக பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை, குறுகிய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது, குறைந்த போலீசாரே பாதுகாப்பு பணியில் இருந்தனர், விஜய் தாமதமாக பிரசார இடத்துக்கு வந்தார் என கரூர் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, 3 நாட்களுக்கு பின் மவுனம் கலைத்த விஜய், கரூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விரைவில் உண்மை வெளிவரும் என வீடியோவில் கூறி இருந்தார்.

இந்த நிலையில், கரூர் துயரம் நடந்தது எப்படி? என்பது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகள் வீடியோ ஆதாரத்துடன் கூறியதாவது; “10,000 பேர் வருவார்கள் என த.வெ.க. தரப்பில் கடிதம் எழுதியிருந்தார்கள். முந்தைய கூட்டங்களை வைத்து 20,000 பேர் வருவார்கள் எனக் கணித்து அதற்கேற்ப காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே நடைமுறை, ஆனால் கரூரில் 20 பேருக்கு ஒரு காவலர் போடப்பட்டது. கூட்டத்துக்கு 27 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர்.

போலீசார் இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்க முடியாது என விஜய்யே கூறியுள்ளார்.

கட்சித்தலைவர் வரும்போது வந்த கூட்டமும், ஏற்கெனவே இருந்த கூட்டமும் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

விஜய் பிரசார வாகனத்துக்கு வழிவிடும்போது நெரிசல் ஏற்பட்டது.

பிரசார வாகனத்தை முன்பே நிறுத்தும்படி அறிவுறை கூறப்பட்டது. ஆனால் அதனை தவெகவினர் ஏற்கவில்லை.

பிரசாரத்தில் விஜய் பேசியபோது மின்சாரம் நிறுத்தப்படவில்லை. ஜெனரேட்டர் ரூமுக்குள் அதிகம் பேர் புகுந்ததால் அங்கு மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

மக்கள் காலையில் இருந்தே காத்திருந்ததால் சோர்வடைந்துள்ளனர். தண்ணீர் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை.

கரூர் கூட்டத்திற்கு கட்சியினர் 5 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்திருந்தனர். விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன. சிலர் மயக்கம் அடைந்த தகவல் அறிந்து கூட்டத்திற்குள் முதலில் வந்தது த.வெ.க. ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ்தான்.”

ஆட்சியரின் ஒப்புதலோடு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனையை தாமதப்படுத்தி இருந்தால் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டு இருக்கும். கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்தோம்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com