வி.கே. பாண்டியன் - ஜெயக்குமார்
வி.கே. பாண்டியன் - ஜெயக்குமார்

ஒரிசா தமிழ் அதிகாரியை இழிவுபடுத்துவதா! – அ.தி.மு.க. கண்டனம்!

“எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பா.ஜ.க. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?” என்று அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்:

"தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்!அறிந்தவர்கள்! ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பா.ஜ.க. ஏவியது!

தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்திப் பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதைப் போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

வி.கே.பாண்டியன் போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பா.ஜ.க. சித்தரித்துள்ளது. உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள் என்பது பா.ஜ.க.விற்கு தெரிய வாய்ப்பில்லை. ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பா.ஜ.க. அவமதித்துள்ளது. எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பா.ஜ.க. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது? கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்குத் தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர். ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பா.ஜ.க. பார்க்கிறது. மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்.” என்று ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com