வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக டிச. 17ஆம் தேதி நாம் நடத்தவிருக்கும் போராட்டம், பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது; நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவினருக்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள மடலில் கூறப்பட்டிருப்பதாவது: “நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிசம்பர் 17ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர் என்பதை நான் அறிவேன்.
தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் அழிக்க முடியாத இன்னொரு முத்திரையை பதிக்கவிருக்கும் நமது போராட்டத்திற்கு சரியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதை நினைவூட்டுவதற்காகவும், எரியும் தீபத்தின் திரியை பெரிதாக்கி ஒளியைக் கூட்டுவதைப் போல, சமூகநீதிப் போராட்டத்திற்காக நீங்கள் மேற்கொண்டு வரும் ஏற்பாடுகளை விரைவுபடுத்தவும், விரிவுபடுத்தவும் தான் உங்களுக்கு இந்த மடலை வரைகிறேன்.
தமிழ்நாட்டின் சாபம், குறிப்பாக சமூகநீதியின் சாபம் தான் தமிழ்நாட்டின் இன்றைய ஆட்சியாளர்கள். சமூகநீதி என்ற சொல்லின் உணர்வையும், பொருளையும் அறியாதவர்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நம்பிக்கைத் துரோகம் தான். அவர்களது உடலின் அணுக்களில் பொதிந்திருப்பது எல்லாம் அது மட்டும் தான். நம்பிக்கைத் துரோகத்தின் எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள் என்பதை அனுபவித்தவர்கள் நாம்.
அதுமட்டுமின்றி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் 10 முறை கடிதம் எழுதினார்; 10 முறை தொலைபேசியில் பேசினார்; ஒருமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். நான் 3 முறை முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினேன். நமது கட்சி நிர்வாகிகள் குறைந்தது 50 முறையாவது ஆட்சியாளர்களை சந்தித்து மனு அளித்திருப்பார்கள்.
ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நம்ப வைத்த ஆட்சியாளர்கள், கடைசியாக 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இதே கோரிக்கையை வலியுறுத்திய போது தான், ஆட்சியாளர்கள் அவர்களின் உண்மை முகத்தைக் காட்டினார்கள். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறி நம்பிக்கை துரோகம் செய்தனர்.
ஆட்சியாளர்கள் பரிசாக அளித்த நம்பிக்கைத் துரோகம் என்ற வலி இன்னும் என்னையும், உங்களையும் வருத்திக் கொண்டே இருக்கிறது. ஆனாலும், நாம் பட்ட துன்பங்களையும், துயரங்களையும் நமது தலைமுறைகள் அனுபவிக்கக் கூடாது. கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தான் வலிகளையும் தாங்கிக் கொண்டு நான் போராடத் தயாராகிறோம்.
தமிழகத்தை ஆளும் திமுகவினர், சென்னை மாகாணத்தில் நூறாண்டுக்கு முன் 100% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்த நீதிக் கட்சியின் வாரிசுகளாகக் காட்டிக் கொள்வார்கள். வள்ளலார் அவர்களால் வஞ்சகர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்ட உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் குணம் கொண்டோர் அவர்கள். பொதுவெளிக்கு வந்தால், சமூகநீதி தான் தங்களின் உயிர்மூச்சு என்று மார்தட்டிக் கொள்வார்கள். ஆனால், அதிகாரம் அவர்களின் கைகளில் கிடைத்தால் சமூகநீதியை காலில் போட்டு நசுக்குவார்கள். அதுவும் வன்னியர்களுக்கான சமூகநீதி என்றால், அதன் தடமே தெரியாமல் அழிக்க நினைப்பவர்கள் தான் இந்த சமூக அநீதியாளர்கள்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, இன்றுடன் 1327 நாள்கள் நிறைவடைந்து விட்டன. திமுக அரசு நினைத்திருந்தால் 27 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால், கூடுதலாக 1300 நாள்களாகியும் கூட வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை. இது தான் ஆட்சியாளர்களின் உண்மை முகம்.
ஜாடிக்கு ஏற்ற மூடியைப் போல சமூகநீதிக்கு எதிரான திமுக அரசு, சமூகநீதிக்கு எதிரான பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தை அமைத்திருக்கிறது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டு இன்றுடன் 1040 நாள்கள் ஆகி விட்டன. ஆனால், இன்று வரை அதற்கான பரிந்துரையை ஆணையம் வழங்கவில்லை. ஆணையத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், பதவியில் இல்லாத இந்த ஆணையத்திற்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை வழங்குவதற்காக அடுத்த ஆண்டு ஜூலை 16ஆம் நாள் வரை அரசு காலநீட்டிப்பு வழங்கியுள்ளது. இதைவிட சமூகநீதி பித்தலாட்டம் இருக்க முடியாது.
திமுக அரசின் இந்த சமூகநீதி நம்பிக்கைத் துரோகங்கள், மோசடிகள், பித்தலாட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்; தொடர் போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் டிசம்பர் 17ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது பாட்டாளி மக்கள் கட்சியினருக்கான போராட்டம் மட்டும் அல்ல. கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளிலும், அனைத்து இயக்கங்களிலும் உள்ள சமூக அநீதியால் பாதிக்கப்பட்ட வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுப்பதற்கான போராட்டம் தான் இதுவாகும்.
சிறை நிரப்பும் போராட்டத்தின் நோக்கங்களை விளக்கும் துண்டறிக்கைகளை அனைத்துக் கட்சியினரிடமும் கொடுத்து, குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்புவதற்காக நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக் கூடாது. நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும்.
பாட்டாளிகளை அடைக்க தமிழ்நாட்டின் சிறைகள் போதாது என்று அஞ்சும் அளவுக்கும், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக் கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும். அதற்கேற்ற வகையில் போராட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். போராட்டக் களத்தில் உங்களுடன் கைக்கோர்த்து போராடுவதற்கான நாளை எண்ணி, எண்ணி காத்துக் கொண்டிருக்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.