பேரன்புடன் எனக்காக காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன் நிச்சயமாக உங்களைச் சந்திக்க மீண்டும் அங்கு வருவேன் என்று தவெக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், நேற்று திருச்சியில் தனது பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். திருச்சி விஜய்யை வரவேற்க தவெக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால், அங்கு விஜய் பேசுவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து அரியலூரில் பேசிவிட்டு, குன்னம் பகுதியில் வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் சென்றார்
ஆனால் பெரம்பலூர் சென்றபோது நள்ளிரவு நேரமானதால் விஜய் அங்கு பேசாமல் சென்றுவிட்டார். இதனால் அங்கு அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த தவெக தொண்டர்கள் ஏமாற்ற அடைந்தனர். இந்த நிலையில், பெரம்பலூரில் காத்திருந்த மக்களிடம் வருத்தும் தெரிவித்துக் கொள்வதாக விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, உங்க விஜய் நான் வரேன் எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும், பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானுகோடி நன்றி.
வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது.
எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.