
“பிரதமர் மோடி மலேசியாவுக்கு சென்றால் தமிழை புகழ்ந்து பேசுவார், ஆனால் ஒடிசாவுக்கு சென்றால் தமிழர்களை திருடர்கள் என்பார்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பிரதமர் மோடி மலேசியாவுக்கு சென்றால் தமிழை புகழ்ந்து பேசுவார். ஏனென்றால் தமிழர்கள் அதிகளவில் மலேசியாவில் இருக்கிறார்கள். ஆனால் பிரதமர் ஒடிசாவுக்கு சென்றால் தமிழர்களை திருடர்கள் என்பார்.பீகாருக்கு சென்றாலும் தமிழனை திருடன் என்பார். ஆனால் அவர் வெளிநாட்டுக்கு சென்றால் தமிழர்கள் இணைப்பு பாலமாக இருப்பவர்கள் என்பார்.
தமிழகத்தில் கொண்டாடுவதை போல மலேசியாவிலும் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டப்படுகிறது. அங்கே இருப்பவர்கள் மதம், இனம் பாராமல் அனைவரும் தமிழ் கடவுளாக முருகனை ஏற்றுக்கொண்டு விழாவை நடத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்து தான் பிரதமர் மோடி இவ்வாறு பேசுகிறார்.
தமிழ் கடவுள் முருகனை வணங்குகின்றவர்களுக்கு திராவிட மாடல் குறித்து புரியும். தங்களுக்கு பாதுகாப்பு திராவிட மாடல் ஆட்சி தான் என உணர்ந்தவர்கள்தான் தமிழக முருக பக்தர்கள்.
அமெரிக்கா- இந்தியா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு தான் நலனே தவிர, இந்தியாவுக்கு கிடையாது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கினால் 50 டாலர் என்றால் அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் 55 டாலர். இதனால் அம்பானிக்கும் அதானிக்கும் தான் ஆதாயம். எந்த விஷயத்திலும் பிரதமர் மோடியின் இறுதி முடிவை பார்த்தால், அதானி அம்பானிக்கு மிகுந்த பொருளாதார வளத்தை பெருக்கி தரக்கூடியதாகவே இருக்கும். தவெகவுக்கு 42 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக செங்கோட்டையன் கூறுகிறார். செங்கோட்டையனுக்கு அரசியல் குறித்த புள்ளி விவரங்கள் தெரியாது. அவருக்கு மக்களின் மனதை அறியத் தெரியாது.
எடப்பாடி பழனிசாமி எப்பொழுதுமே கனவு கண்டு கொண்டிருப்பவர் என்பது நாடறிந்த உண்மை.
அன்புமணி ராமதாஸ் மருத்துவத்தை பற்றி ஏதாவது கூறியிருந்தால் பரவாயில்லை, அவர் பொருளாதார நிபுணரும் அல்ல; மேதையும் அல்ல. பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான இடத்தை கொடுத்திருக்கிறது தமிழக அரசு. தமிழகம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.