விஜய் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் விஜய் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்காமல் தவிர்த்து வந்தார். பின்னர் வழக்கம் போல் வீடியோவை வெளியிட்டதோடு, அந்த வீடியோவில் தவெகவினரை திமுகவுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் விஜய் பேசியது விமர்சனத்தை பெற்று வருகிறது.
இதனிடையே தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பாஜகவினர் பேசி வரும் நிலையில், பாஜகவின் உயர்மட்ட தலைவர்களின் ஆதரவை பெற ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ”புஸ்ஸி ஆனந்த் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆதவ் அர்ஜுனா டெல்லி வரை செல்கிறார்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த திருமா, "கரூர் சம்பவத்தில் தமிழக போலீசார் காட்டும் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏன் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய என்ன முகாந்திரம் இருக்கிறது. அந்த முகாந்திரம் விஜய்க்கு இல்லையா? ஆதவ் அர்ஜுனா மீது ஏன் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை? தமிழக அரசு அச்சப்படுகிறதா?
தமிழக காவல்துறை அச்சப்படுகிறதா? அல்லது வலுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு போடுவதில்லை, இளைத்தவர்கள் மீது தான் வழக்குப்பதிவு போடுவது என்கிற நடைமுறையை கையாள்கிறதா? 15, 20 வருடங்களுக்கு முன், நான் நயினார் பாளையம் என்ற இடத்தில் நான் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கிறேன். புதுச்சேரி அருகில் ஒரு சம்பவம் நடக்கிறது அன்றைக்கு விழுப்புரம் எஸ்பியாக இருந்த ரவி என் மீது வழக்கு போட்டார்.
எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு தெரியாத ஒரு நிகழ்வு. கட்சிக்காரர்கள் ஏதோ ஒரு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற உடன் சம்மந்தமே இல்லாத என் மீது பல வழக்குகளை எந்த தொடர்பும் இல்லாத நிலையில் போடப்பட்டு இருக்கிறது. காவல்துறையின் இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. எதற்காக அச்சப்படுகிறார்கள்? யாருக்காக அச்சப்படுகிறார்கள்.
எல்லோரும் சமம் என்று பார்க்கிற போது அந்த கட்சியில் சம்மந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள், அலட்சியமாக இருந்தவர்கள், இந்த உயிரிழப்பிற்கு காரணமான நிலைப்பாட்டை எடுத்தவர்கள், கால தாமதம் செய்தவர்கள் என்கிற வரிசையில் நடிகர் விஜயும் தானே வருகிறார். அவர் மீது வழக்கு தொடுப்பதற்கு தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம், இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல.
கரூர் விவகாரத்திலிருந்து தவெக தலைவர் விஜய்யை காப்பாற்ற பாஜக முயற்சித்து வருகிறது. விஜய் கொள்கை எதிரியாக சொல்லும் பாஜகவே, அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது.
தமிழ்நாட்டில் நுழைய பாஜக பல சூழ்ச்சிகளை செய்கிறது. விசிக இருக்கின்ற வரை அதை நடக்க விடமாட்டோம்.” இவ்வாறு திருமாவளவன் கூறினார்.