பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஜனவரி 2இல் திருச்சியில் பிரதமர் மோடி - புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட ஜனவரி 2ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

அன்று காலை 10.30 மணிக்கு திருச்சிக்கு வரும் பிரதமர் மோடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். சிறந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி, பிரதமர் சிறப்புரை ஆற்ற உள்ளார். அதையடுத்து, திருச்சியில் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை திறந்துவைக்கிறார். ரூ. 1100 கோடிக்கும் அதிகமான செலவில் இந்த புதிய சர்வதேச முனையக் கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு ரயில்வே திட்டங்களையும், சாலை திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும், ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டத்துக்கும், ரூ. 400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட டி.எஃப்.ஆர்.பி. திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

திருச்சி, தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 500 படுக்கைகள் கொண்ட மாணவர் விடுதியையும் பிரதமர் திறந்துவைக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com