அதிமுகவில் இணைந்தது குறித்து காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு விலகிய காளியம்மாள் இன்று அதிமுக பொதுச்செயலாளர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “நாதகவிலிருந்து விலகி ஓராண்டு கழித்து இன்று அதிமுகவில் இணைந்துள்ளேன். மீண்டும் என்னுடைய அரசியல் பயணம் தொடரும். நான் அதிமுகவை தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த கட்சியில் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தாலும் தலைமையை எட்டமுடியும் என்ற ஜனநாயக சூழல் உள்ளது. இரண்டு, ஒரு தமிழனின் தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்ற மன உறுதி.
இன்றுள்ள அரசியல் சூழலில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்றம் வராதா என்று எதிர்பார்க்கிறார்கள். வரும் தேர்தல் அதற்கான பரிசை தரும். அரசியல் களத்திலிருந்து ஓய்வு தேவைப்பட்டதால் இந்த ஒருவருடம் அரசியலிலிருந்து விலகி இருந்தேன். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.
2010ஆம் ஆண்டே அதிமுகவில் மாவட்ட பொறுப்பில் இருந்தேன். பதவி வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்." என்றார்.