கோவையில் மோடி கார் உலாவுக்கு அனுமதி- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
தேர்தலையொட்டி அடிக்கடி தமிழகத்துக்கு வந்துசெல்லும் பிரதமர் மோடி வரும் 18ஆம் தேதி கோவைக்கு வர உள்ளார். அப்போது, காரில் இருந்தபடியே சாலை வழியாக ரொடு ஷோ எனப்படும் கார் உலா போவதற்கு பா.ஜ.க. சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி தரமுடியாது என காவல்துறை கூறிவிட்டது.
அதை எதிர்த்து பா.ஜ.க. கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கவேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
கார் உலாவின்போது பதாகைகள் போன்றவற்றை வைக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
ஆனால், பிரதமர், முதலமைச்சர் போன்றவர்களின் நிகழ்ச்சிகளால் பொதுமக்களின் நடமாட்டத்துக்கு இடையூறு நேரத்தான் செய்யும்; பிரதமரின் பாதுகாப்பைக் காரணம் கூறக்கூடாது; அதை அவரின் சிறப்புப் பாதுகாப்புப் படை பார்த்துக்கொள்ளும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.