கருத்துரிமையை நசுக்குவதா? ஆள்வோருக்கு எதிராகக் கருத்துக் கூறக்கூடாதா என்று தி.க. தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
இன்றைய அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
” தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட இருப்பதாகச் சொல்லப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க ஒரு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கின் விசாரணைக்காக என்ற பெயரில் புதிய தலைமுறை நெறியாளரும், ஊடகவியலாளருமான விஜயனைக் காவல்துறையினர் மூன்று முறை அழைத்து, நள்ளிரவிலும் அலைக்கழித்து, கைப்பேசியையும் பறித்து வைத்துக் கொண்டது அத்துமீறிய செயலாகும்.
உரிய விதிகளைப் பின்பற்றி, எவர் ஒருவரையும் விசாரணைக்கு அழைக்கக் காவல்துறைக்கு உரிமை உண்டு. ஆனால், விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதும், விதிகளை மீறி கைப்பேசியைப் பறித்துக் கொள்வதும், மிரட்டுவதும், அதிலும், ஊடகவியலாளர் மீது இத்தகைய நடவடிக்கைகளை ஏவுவதும் கருத்துரிமையை நசுக்கும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
கடந்த சில நாள்களாகவே, சமூக ஊடகங்களில் ஆள்வோருக்கு எதிராகக் கருத்து சொல்வோர் மீது கைது நடவடிக்கைகள் பாய்ந்துவருவதும், ஊடகவியலாளர்கள் மிரட்டப்படத் தொடங்கியிருப்பதும் ஜனநாயக அரசுக்கான சரியான அறிகுறியல்ல. உடனடியாக விஜயனின் கைப்பேசி திருப்பி அளிக்கப்பட வேண்டும். இனியும் தமிழ்நாடு அரசு இத்தகைய நடவடிக்கைகளை, கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் யார் மீதும் தொடரக் கூடாது.” என்று கி. வீரமணி கூறியுள்ளார்.