கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் சேகர் பாபு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் சேகர் பாபு

பொங்கலுக்கு திறக்கப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

வரும் ஜனவரி 15ஆம் தேதி அன்று கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகா் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலப்பரப்பில் சுமாா் 400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளுக்கு முழுமையான திட்டமிடல் இல்லாததால் ரூ.100 கோடி மதிப்பில் தற்போது அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த 12 ஆம் தேதி முதல்கட்டமாக வண்டலூர் பூங்காவில் இருந்து 100 அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் ஜனவரி 15 தமிழ் புத்தாண்டு அன்று கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் திறக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளார்.

இன்று காலை செய்தியாளைர்களை சந்தித்த அமைச்சர் பி.கே. சேகர் பாபு கூறியதாவது,”மழைக்காலங்களில் வெள்ளநீர் உடனே வடியும் வகையில் ரூ.13 கோடி செலவில் 1,250 மீ. நீளத்துக்கு புதிய மழைநீா் கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

ஜனவரி 15 ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. முனையத்திலிருந்து 2310 பேருந்துகள் இயக்கப்படும். நாளொன்றுக்கு 1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com