‘கலைஞர் உலகம்' அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி!
கலைஞர் நினைவிடத்தில் உள்ள ’கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தை மார்ச் 6 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 26ஆம் தேதி திறந்து வைத்தார். அங்கு, கலைஞரின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்குகளுடன் கலைஞர் உலகம் என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் பல்வேறு சிறப்புகளை எடுத்துரைக்கும் கலைஞர் உலக அருங்காட்சியகத்தினை பொதுமக்கள் வரும் 6ஆம் தேதி முதல் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் அனுமதி சீட்டு பெற்று பார்வையிடலாம் எனவும், அதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.