
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமலின் மக்கள் நீதி மையம் கட்சி பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட விருப்பப் பட்டியலை அளித்துள்ளது. பகிரங்கமாக எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாதநிலையில் இங்கு அக்கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது மட்டும் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்துக்கும் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ம.நீ.ம. போட்டியிடுவதாக அறிவித்தது. அதன்படி தேர்தல் ஆணையத்திலும் உரிய நடைமுறைகளைச் செய்தது.
அதைத் தொடர்ந்து, புதுச்சேரியின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப் பிரிவு இன்று காலையில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.