கரூர் துயர்… விஜய்க்கு சிபிஐ சம்மன்!

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள் தவெக நிர்வாகிகள், தமிழக அரசின் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் தலைமைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் நிர்மல குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் இறுதியில் நேரில் ஆஜரான தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்று நாள்கள் விசாரணை நடத்தினர்.

அதேபோல், கரூர் மாவட்ட ஆட்சியர் எம். தங்கவேல், கரூா் மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூா் நகர காவல் ஆய்வாளர் ஜி. மணிவண்ணன் உள்ளிட்டோரிடமும் தில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, பரப்புரை கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? அவர் வருவதில் தாமதம் இருந்தால் அதற்கான காரணம் என்ன? பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்யப்பட்டன? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது? கூட்டத்துக்கு எத்தனை போ் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

மேலும், அனைவரும் அவர்கள் தரப்பு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், வழக்கு விசாரணையின் இறுதிகட்டமாக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வருகின்ற 12 ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com